Thursday 15 May 2014

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயம் - கண்டனம்.

வங்கிகள் தேசிய மயமாக்கல் மூலம் நாடு அடைந்த முன்னேற்றத்தை முடக்குவதற்காக மீண்டும் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கிடும் இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் நடவடிக்கைகளை இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டித்துள்ளது.இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடே எதிர்நோக்கி இருக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கி நியமனம் செய்த ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவர் பி.ஜே.நாயக் தலைமையிலான பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் குழு அறிக்கையை நாயக் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு சாதகமாக 1970, 1980 வங்கி தேசியமயமாக்கல் சட்டங்கள் மற்றும் பாரத ஸ்டேட்வங்கி, பாரத ஸ்டேட் வங்கிதுணைவங்கிகள் சட்டங்களைரத்துசெய்வதற்கு பரிந்துரை செய்கிறது.இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாடு பி.ஜே.நாயக் குழு பரிந்துரைகளை கடுமையாக எதிர்க்கிறது.
திரும்பத் திரும்ப மத்தியில் ஆளும் கட்சிகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளின் மீது முக்கிய முனைப்புக் காட்டும் ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றபின்பு, இதன் வேகம் பன்மடங்கு தீவிரமாகியுள்ளது.1969 ல் தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கல் காலகட்டத்திற்கு முன்பு, 1947 முதல் 1969 வரை 500 தனியார் வங்கிகள் திவாலாகியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வளவு ஏன், 1969 க்குப் பின்னும் கூட 25 தனியார் வங்கிகள் திவாலாகின. இதன் சுமையை பொதுத்துறை வங்கிகளே தாங்கிக் கொண்டன. பொருளாதார நெருக்கடி வெடித்தபோது, செப்டம்பர் 2008 முதல், அமெரிக்காவில் 450 தனியார் வங்கிகள் வீழ்ச்சியடைந்தன.1970 தேசிய மயமாக்கல் சட்டமே அதன் பீடிகையில் என்ன கூறுகிறது? தனியார் வங்கிகள் அவற்றின் உரிமையாளர்களின் நலனைப் பாதுகாக்கவே தொண்டாற்றுகின்றன. உணவுப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, வட்டார சமனற்ற தன்மையை போக்குவது ஆகிய தேசிய நலன் காக்கும் முன்னுரிமைகள் ஆகியவற்றை மனதில் கொண்டே இவை தேசியமயமாக்கப்பட்டன.பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கல் என்பது இந்திய ரிசர்வ் வங்கி, அரசின் பாமரனை உள்ளடக்கிய நிதிக் கொள்கைகளுக்கே முரணானது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமானால், கோடிக்கணக்கிலுள்ள விளிம்பு நிலை மாந்தர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்த வழங்கப்பட்ட கடன் முன்னுரிமை துறைகள் கைவிடப்படும். நிறுவன ரீதியான கடன் வழங்கப்படாததாலேயே கடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமானது.
கல்விக்கடன் வழங்கப்படாவிட்டால் ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடும்; சிறு, குறு வர்த்தகக்கடன் நிறுத்தப்பட்டால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்பும் அழியும்.பெபி-தமிழ்நாடு மக்கள் பணம் மக்கள் நலனுக்கே என்பதற்காகவே நிற்கிறது. ரிசர்வ் வங்கி, அரசு எடுக்கும் தனியார் மயக் கொள்கை பாமரன் நலனுக்குஎதிரானது.

No comments: